வேட்டையன் படம் எப்படி இருக்கு?

வேட்டையன்

இயக்கம் – டி ஜே ஞானவேல்
நடிகர்கள் – ரஜினிகாந்த் , மஞ்சு வாரியர் , பஹத் பாசில், அமிதாப் பச்சன்
இசை – அனிருத்
தயாரிப்பு – லைகா புரொடக்ஷன்

கன்னியாகுமரி மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரியான ரஜினிகாந்த், குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை அழிப்பதற்கும் சட்டத்தை விட என்கவுண்டரே சரியான வழி, என்ற ரீதியில் பயணிக்கிறார். மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அமிதாப் பச்சன், சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலை உருவாகும், என்ற மனநிலையோடு என்கவுண்டர்களுக்கு எதிராக இருக்கிறார். இந்த சமயத்தில், பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்படும் இளைஞர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்து விடுகிறார். அவரை என்கவுண்டர் செய்வதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வரவைக்கப்படும் ரஜினிகாந்த், உண்மை அறியாமல் அந்த இளைஞரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த என்கவுண்டரில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டும் அமிதாப் பச்சன் தலைமையிலான விசாரணைக் குழு, அதன் பின்னணியை விசாரிக்கும் போது பல உண்மைகள் தெரிய வருவதோடு, என்கவுண்டர் மூலம் குற்றவாளிகளை தண்டிப்பது சரியான பாதை அல்ல, என்பதை உணர்ந்துக் கொள்ளும் ரஜினிகாந்த், அதன் பிறகு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வது தான் இந்தப் படத்தின் மீதிக்கதை ,

‘.

அதியன் என்ற கதாபாத்திரத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த், முதல் பாதியில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து வேட்டையனாக அதிரடி காட்டுகிறார். இரண்டாம் பாதியில் போலீஸ் வேட்டையனாக இருப்பதை விட மக்களின் பாதுகாவலனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அவர் மேற்கொள்ளும் புலன் விசாரணையும், அதில் அவர் வெளிப்படுத்தும் வேகமும் படத்தின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு அதிகரிக்கிறது. வயதுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் அந்த கதாபாத்திரத்தை கையாண்டதோடு, “குறி வச்சா எற விழனும்” என்ற பஞ்ச் வசனம் மூலம் திரையரங்கையே அதிர வைக்கும் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுடன் திரை ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறார். மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி தான் பேசும் வசனங்களுக்கும் உயிர் கொடுக்கும் விதத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

“மூளை இல்லனா போலீஸ் ஆகலாம், திருடனாக முடியாது” என்று போலீஸை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் நல்ல திருடனாக வலம் வரும் பகத் பாசில், “கல்வி தான் எதிர்காலம் என்று நினைக்கும் இந்தியா போல் உலகில் உள்ள பல நாடுகளில் என் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவேன்” என்று கூறிக்கொண்டு அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்க நினைக்கும் கல்வி வியாபாரியாக நடித்திருக்கும் ராணா டக்குபதி இருவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், அரசு பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

அனிருத் இசையில் “மனசுலாயோ…” பாடல் மனதில் ஒட்டிக்கொள்ள, ”வேட்டையன் தீம்” பாடல் மற்றும் ”ஹண்டர் வந்தார்” பாடல் காட்சிகளுக்கு வீரியம் கொடுக்கும் விதமாக பயணிக்கிறது. பின்னணி இசை அனிருத்தின் வழக்கமான பாணியில் இருந்து வித்தியாசப்பட்டு பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் தனது கேமரா ஜாலங்கள் மூலம் ரஜினிகாந்தை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களமாக காண்பித்திருக்கிறார்.

இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் அவர்களை சரியாக கையாண்டதோடு, அவர்களின் கதாபாத்திரங்களை திரைக்கதையோடு ஒட்டி பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் டி.ஜே.ஞானவேல், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்களின் கவனம் சிதறாமல் திரைக்கதையை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார்.ஜெய்பீம்’ படம் மூலம், சட்டம் பணம் படைத்தவர்களுக்கும், அதிகாரத்திற்கும் எப்படி வளைந்து கொடுக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர, இதில், காவல்துறையால் நடத்தப்படும் என்கவுண்டர்கள் சிலவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியங்களையும், அதில் அப்பாவி மக்கள் எப்படி பலியாக்கப்படுகிறார்கள் என்பதையும் ரஜினிகாந்துக்கு ஏற்ப மாஸாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த கிளாஸாகவும் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த ” வேட்டையன்” ஒரு மாஸ் விருந்து

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *