ஆரிய மாலா படம் எப்படி இருக்கு?

ஆரிய மாலா

இயக்கம் – ஆர் எஸ் விஜயபாலா
இசை – செல்வன் நம்பி
நடிகர்கள் – ஆர் எஸ் கார்த்திக் , மனிசாஜித் , எலிசபேத் , சிவ சங்கர்
தயாரிப்பு – ஜனஜாய் மூவிஸ் – வடலுர் ஜே சுதாரலக்ஷ்மி

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெற்றோர் மற்றும் தங்கையுடன் வசிக்கும் நாயகி மனிஷாஜித்தின் கனவில் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் வருகிறார். கனவில் கண்டதும் காதல் கொள்ளும் நாயகி கனவு கலைந்த பிறகும் நாயகனை நினைத்துக் கொண்டிருக்கிறார். தெருக்கூத்து கலைஞரான ஆர்.எஸ்.கார்த்திக், கோவில் திருவிழாவில் தெருக்கூத்து போடுவதற்காக நாயகியின் கிராமத்திற்கு வருகிறார். கனவில் கண்டவரை நிஜத்தில் பார்த்ததும் தன்னை அறியாமலயே தன் காதலை கண்கள் மூலமாக மனிஷாஜித் வெளிப்படுத்த, அவரது கண்கள் மூலம் அவரது மனஓட்டத்தை அறிந்துக் கொள்ளும் ஆர்.எஸ்.கார்த்திக்கும் அவரை காதலிக்க தொடங்குகிறார். இருவரும் கண்கள் மூலமாகவே தங்களது காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகன் நாயகியிடம் தன் காதலை வெளிப்படுத்தி விடுகிறார். ஆனால், நாயகியோ நாயகனின் காதலை நிராகரிப்பதோடு, அவரை அவமானப்படுத்தும் விதமாக பேசி விடுகிறார். நாயகியின் இத்தகைய நடவடிக்கைக்கு காரணம் புரியாமலும், காதல் கைகூடாததாலும் தவிக்கும் நாயகன், ஆர்.எஸ்.கார்த்தி, தெருக்கூத்தின் இறுதி நாளில் மீண்டும் நாயகியை சந்தித்து தனது காதல் பற்றி பேச முயற்சிக்கும் போது, நாயகி மனிஷாஜித்தின் மாமா அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து நாயகியை நாயகன் காப்பாற்றினாரா?, கனவில் காதலிக்க தொடங்கியவர்களின் காதல் நிஜத்தில் ஜெயித்ததா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் ‘ஆர்யமாலா’.

இந்தப் படம் 1982-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது இப்படத்தின் கதையும் அதே காலக்கட்டத்தில் நடக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.கார்த்திக், இயல்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். நாயகனின் கதாபாத்திரம் இடைவேளையின் போது வந்தாலும், காதலுக்காக ஏங்கும் காட்சிகளிலும், காதல் நிராகரிக்கப்பட்ட பிறகு வருந்தும் காட்சிகளிலும் தனது அழுத்தமான நடிப்பு மூலம் ஆர்.எஸ்.கார்த்திக் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார். குறிப்பாக தெருக்கூத்தில் காத்தவராயனாக நடித்து அசத்தியிருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் மனிஷாஜித், கிராமத்து கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகம். தனக்கு இருக்கும் பிரச்சனையை நினைத்து அவர் வருந்துவதும், கனவில் வந்தவரை மனதில் நினைத்துக் கொண்டு வெட்கப்படுவதும் என்று படம் முழுவதும் தனது இயல்பான நடிப்பு மூலம் மலர் என்ற கதாபாத்திரத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார்.

நாயகியின் தாய்மாமனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் யுவன், உருவத்தில் மண்ணின் மைந்தனாக கவனம் ஈர்ப்பதோடு, இயல்பான நடிப்பு மற்றும் நடனம் மூலம் யாருப்பா இவரு? என்று கேட்க வைக்கிறார். சிறிய வேடம் என்றாலும் வழக்கம் போல் தனது தனித்துவமான நடிப்பு மூலம் தன் இருப்பை நெருப்பு போல் வெளிக்காட்டியிருக்கும் மாரிமுத்து, வில்லனாக மிரட்டியிருக்கிறார். நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் எலிசபெத், தெருக்கூத்து குழுவின் வாத்தியராக நடித்திருக்கும் நடன இயக்குநர் சிவசங்கர், ஊர் பெரியவராக நடித்திருக்கும் தவசி, நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் மணிமேகலை உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி சரியாக நடித்திருக்கிறார்கள்.

பசுமையும், அமைதியும் நிறைந்த கிராமத்தில் நடக்கும் காதல் கதையை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஜெய்சங்கர் ராமலிங்கம், பார்வையாளர்களுக்கு கிராமத்தில் பயணித்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் செல்வநம்பியின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. 1982-ம் காலக்கட்டத்திற்கு ஏற்ப பாடல்களை திரும்ப திரும்ப கேட்க வைப்பதோடு, வரிகள் அனைத்தும் புரியும்படியும் இசையமைத்திருக்கிறார். குறிப்பாக பாடல்கள் மற்றும் பின்னணி இசை நம் மனதுக்கு நெருக்கமானதாக பயணிப்பதோடு, புதுவிதமான சப்தங்கள் மூலம் இசையமைப்பாளர் பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.

வேகம் இல்லாத திரைக்கதை, விறுவிறுப்பில்லாத காட்சிகள் என்று படம் பயணித்தாலும், கதையோடும், நாயகியின் கவலையோடும் நம்மை பயணிக்கும்படி காட்சிகளை மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஹரிஹரன்.

அய்யனார் கோவில், தெருக்கூத்து நடக்கும் இடம் உள்ளிட்ட கிராமத்தின் எதார்த்தங்களை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கும் கலை இயக்குநர் சிவ யோகாவின் பணியும் சிறப்பு. நாயகியை முதன்மைப்படுத்தி நகரும் கதையில், தனது திரைக்கதை மற்றும் வசனம் மூலம் பெண்களின் காதலை மிக அழுத்தமாகவும், அழகாகவும் பதிவு செய்திருக்கிறார் படத்தின் இணை இயக்குநர் ஆர்.எஸ்.விஜய பாலா.கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் காதல் கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருப்பதோடு, மலர் என்ற பெண்ணின் மனதுக்கும், அவரது காதலுக்கும் மரியாதை கொடுக்கும் விதமாக படத்தை மிக நாகரீகமாக கையாண்டிருக்கும் படக்குழுவினர் பெண் சமூகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.தெருக்கூத்து மூலம் படத்தில் சொல்லப்படும் காத்தவராயன் – ஆர்யமாலா காதல் கதையையும், மலர் மற்றும் தெருக்கூத்து கலைஞரின் கனவு காதலையும் ஒன்றிணைக்கும்படி காட்சிகளை வடிவமைத்த விதம் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

சில பிரச்சனைகளால் படத்தின் இயக்குநர் பெயரை படக்குழு வெளியிடாதது போல், படத்தில் சில குறைகள் இருந்தாலும், ஒரு சிறிய பட்ஜெட்டில், வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்துக் கொண்டு, உண்மை சம்பவத்தை அழகான காதல் கதையாகவும், பெண்களின் மனபோராட்டங்களில் இதுவரை சொல்லப்படாத ஒரு விசயத்தை உணர்வுப்பூர்வமாகவும் சொன்னதில் படக்குழு மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘ஆர்யமாலா’ கலையின் மூலம் கவர்ந்திழுப்பாள்

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *