
“ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்யன்”.
விமர்சகர்கள் பாராட்டில் மற்றும் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, படத்திற்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்
எடிட்டர் சான் லோகேஷ் பேசியதாவது..,
ஆர்யன் படத்திற்குத் தந்த பாராட்டுக்களுக்கும் நல்ல விமர்சனங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,
ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போதைய நிலையில் மிகவும் முக்கியம். ஆர்யன் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்குப் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தில் மியூசிக்கில் ஒரு புதுவிதமான முயற்சி செய்தோம். ஒன்று பாராட்டுவார்கள், இல்லை திட்டுவார்கள் என நினைத்தோம். அனைவரும் புதிய முயற்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டினீர்கள் நன்றி. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பிரவீனுக்கு நன்றி. விஷ்ணுவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அர்ப்பணிப்பு பிரமிப்பானது. எப்போது கூப்பிட்டாலும் தயாராகவே இருப்பார். சினிமாவை நேசிக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.
நடிகை மானசா சௌத்திரி பேசியதாவது..,
மிகப்பெரிய அன்பைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனிதா என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ரோல், இந்த வாய்ப்பைத் தந்த பிரவீன் சாருக்கு நன்றி. விஷ்ணு சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் அவருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசியதாவது..,
இப்படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கை இருந்தது. இந்த அளவு பாராட்டுக்கள் எதிர்பார்க்கவில்லை. நல்ல கதை ஜெயிக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். எல்லாவற்றையும் இணைத்த இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. இந்த மூன்று வருடத்தில் பல தடைகள் வந்தாலும், நாங்கள் நினைத்த திரைப்படத்தை கொண்டுவர முடிந்தது. பிரவீன் முதல் படத்திலேயே தன் திறமையை நிரூபித்துவிட்டார். விஷ்ணு மிகப் பொறுமையாக இருந்து இப்படத்தை உருவாக்கினார். ஆர்யன் படத்திற்கும், டயானா பாத்திரத்திற்காகவும், விஷ்ணுவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.
இயக்குநர் பிரவீன் பேசியதாவது..,
இப்படத்தைத் திரையரங்கில் சென்று பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக்கும் உடன் இருந்ததற்கும் விஷ்ணுவிற்கு நன்றி. படத்தின் நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர், இயக்குநர் செல்வராகவன் பேசியதாவது..,
நல்ல படம் எடு, நாங்கள் கொண்டு போய் சேர்க்கிறோம் என செயல்பட்டு வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. யாருமே கண்டுகொள்ளாத துள்ளுவதோ இளமை எனும் முதல் படத்திலிருந்து என்னைத் தூக்கிப்பிடித்து, இப்போது வரை ஆதரவளித்து வருகிறீர்கள், அதற்கு நன்றி. விஷ்ணு மற்றும் பிரவீன் அவர்களின் பரந்த மனதிற்கும் அன்பிற்கும் நன்றி.
நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது ..,
ஆர்யன் எனக்கும் மிகவும் ஸ்பெஷலான படம். என்னுடைய மகனின் பெயரில் எடுத்த படம். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸில் எடுத்த மூன்றாவது தொடர் வெற்றிப்படம் . இது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. என் மகனும் படம் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டார். படம் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்தார், அது எனக்கு மிகப்பெரிய விருது. 2023 ரிலீஸ் தேதி வைத்துவிட்டு இந்தப்படம் ஆரம்பித்தோம், ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. ஆனால் இந்த இடைவெளியில் முழு உழைப்பைத் தந்து, இயக்குநர் பிரவீன் மிகப்புதுமையான படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தைப் பற்றி சில மாறுபட்ட கருத்துகளும் வந்தது, என்ன கிளைமாக்ஸ் வைப்பது என எங்களுக்குள் நிறைய விவாதங்கள் நடந்தது. அது பற்றிய விமர்சனங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. இனி படம் பார்ப்பவர்கள் புது க்ளைமாக்ஸை பார்ப்பார்கள், அது தான் பிரவீன் வைத்திருந்த கிளைமாக்ஸ். என் படங்கள் திரையரங்கத்தைத் தாண்டி ஓடிடியில் நல்ல வெற்றி பெறுகிறது. இது படத்திற்குப் படம் மாறுபடும். ஆர்யன் படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும். தியேட்டரிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான். இந்தப்படத்தில் எடிட்டிங் மிக முக்கியம் அதை சான் லோகேஷ் சிறப்பாக செய்தார். ஜிப்ரான் சார் கடைசியில் தான் வந்தார், இப்போது மாற்றிய க்ளைமாக்ஸுக்கு கூட மீண்டும் சிறப்பாக வேலை செய்து தந்தார். மானசா சௌத்திரி தந்த ஒத்துழைப்புக்கு நன்றி. நான் வேலை பார்த்ததில் என்னுடைய ஃபேவரைட் நடிகை ஷ்ரத்தா. மிக வித்தியாசமானவர். நிறைய சினிமா பற்றிப் பேசுவோம் அவருக்கு நன்றி. செல்வா சார் இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நடிப்பு பிரமிப்பைத் தந்தது. சைக்கோவிற்கு இருக்கும் வரைமுறைகளை தன் நடிப்பால் உழைத்துள்ளார். நான் எதிர்பார்த்ததை விட 2000 மடங்கு சிறப்பான உழைப்பத் தந்துள்ளார். இயக்க்குநர்பிரவீனை இவ்வளவு காலம் காக்க வைத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த படம் விரைவாகச் செய்ய வாழ்த்துக்கள். கட்டா குஸ்தி 2 விரைவில் வருகிறது. என் தம்பியுடன் ஒரு படம் செய்யவுள்ளேன், இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் ஒரு படம் செய்கிறேன். அடுத்தடுத்து உங்களுக்குப் பிடித்த மாதிரி படங்கள் செய்வேன். அனைவருக்கும் நன்றி.
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லரான இப்படத்தை இயக்குநர் பிரவீன் K இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
புதிய கிளைமாக்ஸுடன் ரசிகர்களின் வரவேற்பில் ஆர்யன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்)
எழுத்து இயக்கம் – பிரவீன் K
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)