பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இயக்குநர் காந்தி கிருஷ்ணா, “நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு அறிவுரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்த கசப்பான உண்மையை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஒருமுறைதான் நமக்கு வாழ்க்கை. அதை ஒழுங்காக வாழ வேண்டும் என்பதுதான் நம் கலாச்சாரம். அதை முடிந்தளவு கமர்ஷியலாக செய்திருக்கிறோம். நிறைய நல்ல படங்கள் கொடுத்துவிட்டு ஏன் சினிமாவில் இவ்வளவு பெரிய இடைவெளி எனப் பலர் கேட்கிறார்கள். ‘கரிகாலன்’ என்ற ஸ்கிரிப்ட் செய்தேன். அதற்கு இரண்டு வருஷம் ஆனது. பின்பு, ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போனது. இப்படியாக, கிட்டத்தட்ட 13 ஸ்கிரிப்ட் என்னிடம் இருக்கிறது. இந்தக் கதைகளுக்கு சரியான தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்க வாய்ப்பிருக்கிறது

’பிரேக்ஃபாஸ்ட்’ கதையை பொருத்தவரை இன்றைய இளைஞர்கள் உலகில் நுழைவதற்கு எழுத்தாளர் சுஜாதா எனக்கு பெரும் உதவியாக இருந்தார். ‘இந்தியன்’ படத்தில் இருந்தே இயக்குநர் ஷங்கருடன் பயணம் செய்திருக்கிறேன். அவர் எழுதும் ஸ்கிரிப்ட்டில் எதாவது பிரச்சினை என்றால் என்னை அழைப்பார். அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். நிறைய படிக்க வேண்டும், படங்கள் பார்க்க வேண்டும் என்பதைத் தாண்டி புதிதாக ஒரு இடத்திற்கு போனால் அங்கு என்ன வித்தியாசமாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவன் தான் உண்மையான கிரியேட்டர் என நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். அதனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நோட் பண்ண முடிந்தது. புதிய கதாநாயகனை வைத்து படம் இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். அவர்களை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற சவாலும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. இந்தக் கதையில் புதுமுகங்கள் நடித்திருப்பதால் எளிதில் பலராலும் கதையை கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஏப்ரல் மாதம் படம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தேசிய விருது வாங்கிய சமயத்தில், பல கமிட்மென்ட்டுக்கு இடையில் ஜிவி பிரகாஷ் எல்லா பாடல்களையும் அற்புதமாக கம்போஸ் செய்து கொடுத்தார். வைரமுத்து சாருக்கும் கதை பிடித்திருந்தது. பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் நடந்தது. பாடல்கள் மணாலி, கஜகஸ்தான், மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்”.

தயாரிப்பாளர் பேசுகையில், “தயாரிப்பாளராக இதுதான் எனக்கு முதல் படம். முதல் படத்திலேயே இதுபோன்று ஒத்துழைப்புடன் பணிபுரியும் படக்குழு எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும். என்னைப் போல பல புதிய தயாரிப்பாளர்களும் சினிமா துறைக்கு வருவார்கள்”.

கதாநாயகன் ராணவ், “ஹீரோவாக நான் என் மேல் நம்பிக்கை வைத்ததை விட சார் தான் என் மீது அதிக நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பணியாற்றி இருக்கிறோம். அதற்கான எடிட்டிங், சிஜி பணிகள் நடந்து கொண்டிருந்தால் வெளியீட்டிற்கு தாமதம் ஏற்பட்டது. இப்போது வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.இந்த தலைமுறையின் ரியாலிட்டியை சார் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படம் பார்த்ததும் பலர் தங்கள் பிரேக்கப்பில் இருந்து மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. விவாகரத்து தம்பதிகள் கூட ஒன்று சேரலாம். அந்த அளவிற்கு வலுவான கதை இந்தப் படத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களே குறைவாக இருக்கிறார்கள். அந்த வகையில், எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதமாக பார்க்கிறேன்”.

நடிகை ரோஸ்மின், “நான் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனேன். பின்புதான் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கமிட் ஆனேன். முதலில் இந்தக் கதையில் நடிக்க முடியுமா என்ற் சந்தேகம் இருந்தது. எல்லோரும் கொடுத்த ஆதரவால் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்தேன். என் கதாபாத்திர பெயர் ஜான்வி. ஜான்வியின் எண்ணங்கள் எனக்குள்ளும் இருப்பது போல நிறைய முறை தோன்றியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், கரியரிலும் இந்தப் படம் எனக்கு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்”.

நடிகர் கிருத்திக் மோகன், “இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன்பு ‘அஞ்சாமை’ என்ற படத்தில் நடித்தேன். நடிப்பு எனக்கு கஷ்டமாக இல்லை. ரொமாண்டிக்காக நடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *