இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் 1540வது படமாக உருவாகும் இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை தரவுள்ளது.

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற வெற்றி திரைப்படங்கள் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார். இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசைஞானி இளையராஜா பகிர்ந்து கொண்டதாவது, “எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவ. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும் தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்”

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டதாவது, “கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்கு சான்று. இசைஞானி இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக அவரது இசையை கொண்டாடி வந்த ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுப்பூர்வமான தருணம். சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடன், குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோருடன் இணைவதிலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்”.

ஜியோ ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட் ஜோதி தேஷ்பாண்டே கூறியதாவது, “கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா போன்ற கலைஞர்களுடனும், சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடனும் இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கதை சொல்லலும் இசையும் இணையும் இந்த திரைப்படத்தை, பெரிய திரையில் ரசிகர்களுக்கு கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்” என்றார்.

சிக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர், “இந்தப் படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். பல தலைமுறைகளை இசையால் கவர்ந்த இளையராஜாவுடன் அவர் இணைந்திருப்பது உற்சாகமான விஷயம். ஜியோ ஸ்டுடியோஸூடன் நாங்கள் முதன்முறையாக இணைந்திருக்கிறோம். நிச்சயம் சிறந்த படமாக இது அமையும்” என்றார்.

சிக்யா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அசின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, “கார்த்திக் சுப்புராஜ் தனித்துவமான படங்களை கொடுப்பவர். இளையராஜா சாரின் இசை காலங்களையும், மொழிகளையும் தாண்டி என்றும் நிலைத்திருப்பது. ஜியோ ஸ்டுடியோஸுடன் நாங்கள் முதல் முறையாக இணைந்திருக்கிறோம். இப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் இணையும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *