பெண் இயக்குநர் காட்சிகா ரோஸ் இயக்கும் ‘மை டியர் டயானா’ இணையத் தொடர்!

பெண் இயக்குநர் காட்சிகா ரோஸ் இயக்கும் ‘மை டியர் டயானா’ இணையத் தொடர்!

ஜி டாக்கீஸ் மற்றும் கட்பிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் ஏ.ஜி.ஆர் கதை எழுதி தயாரிக்கும் இணையத் தொடர் ‘மை டியர் டயானா’. இத்தொடரை அறிமுக இயக்குநர் காட்சிகா ரோஸ் இயக்குகிறார். ஐயப்பன்.என் ஒளிப்பதிவு செய்ய, ஹரிஷ்.எம் இசையமைக்கிறார். கயல்.எஸ் பாடல்கள் எழுதுகிறார். செந்தில் குமார் மேலாளராக பணியாற்றுகிறார்.

ஷாம், நடராஜன், கிளாரா, ஷாலினி, ஏ.ஜி.ஆர், டுரை.இ. ஐஸ்வர்யா, கீர்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்தொடரின் துவக்க விழா நேற்று பூஜையுடன் நடைபெற்றது. இதில், பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.அரவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும், கதையாசிரியருமான ஏ.ஜி.ஆர், “இந்த தலைப்பை நாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பே பதிவு செய்து விட்டோம். முன்னணி நட்சத்திரங்களை வைத்து இதை தொடங்கினோம். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் காலதாமதாகி விட்டது. அதனால், இந்த கதையை அப்படியே விட்டுவிட கூடாது என்று புதியவர்களை வைத்து மீண்டும் உருவாக்க முடிவு செய்திருக்கிறோம். தற்போது பூஜையுடன் துவக்கா விழா நடத்தியிருக்கிறோம். விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ரெஸ்ட்ரோ பார் ஒன்றில் நடக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம். விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு, சுமார் 28 நாட்களில் முழு படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

என்னுடன் பணியாற்றிய காட்சிகா ரோஸ், மிக சிறப்பான பணியாற்றக்கூடியவர், அவரது அர்ப்பணிப்பு, உழைப்பை பார்த்து தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தேன். தமிழ் சினிமாவில் அவர் நிச்சயம் இயக்குநராக தனி இடம் பிடிப்பார், என்று நம்பிகிறேன்.” என்றார்.

இயக்குநர் காட்சிகா ரோஸ் பேசுகையில், “எனக்கு வாய்ப்பளித்த ஏ.ஜி.ஆர் அவர்களுக்கு நன்றி. ‘மை டியர் டயானா’ ரோம் காம் ஜானர் தொடராகும். எந்தவிதமான வன்மம் இன்றி, நாகரீகமான முறையில் படமாக்க உள்ளோம். இளைஞர்களுக்கான தொடராக மட்டும் இன்றி அனைத்து தரப்பினருக்குமான தொடராக உருவாக உள்ளது.” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநரும், நடிகருமான ஆர்.அரவிந்தராஜ் பேசுகையில், “இந்த இளைஞர்களை பார்க்கும் போது எனக்கு என் பழைய நினைவுகள் வருகிறது. இதுபோல தான் மிகவும் கஷ்ட்டப்பட்டு நாங்கள் எங்களை நிரூபித்தோம். இப்போது இவர்களும் மிகவும் சிரமப்பட்டு, அதே சமயம் புதிய கதைக்களத்துடன் ‘மை டியர்டயானா’ தொடரை உருவாக்க இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *