
”’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகிறது”- ஜாரெட் லெட்டோ!”’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் சரியான நேரத்தில் வெளியாகிறது”- ஜாரெட் லெட்டோ!
டிஸ்னியின் வெளிவரவிருக்கும் அறிவியல் புனைக்கதை திரைப்படமான ’டிரான்: ஏரஸ்’ இந்த வாரம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், ‘சரியான நேரத்தில் வெளி வருவதாக’ முன்னணி நடிகர் ஜாரெட் லெட்டோ தெரிவித்துள்ளார்.
லண்டன் திரையிடலின் போது, டிஜிட்டல் ஸ்பை பத்திரிகையிடம் ஜாரெட் கூறுகையில், “செயற்கை தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாக இருக்கும் வேளையில் இந்தப் படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும். இந்த படத்தில் நாங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்யத் தொடங்கினோம். நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராகவோ அல்லது கல்வியாளராகவோ இல்லாதபட்சத்தில் அந்தசமயத்தில் பெரிதாக யாரும் செயற்கை தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசவில்லை. இப்போது ஏஐ தொழில்நுட்பம் பற்றி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எல்லோரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். செயற்கை தொழில்நுட்பம் நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. இப்படியான சமயத்தில் படம் வெளியாவது பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என்றார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இந்த படத்தில் பணிபுரிந்த ஜாரெட் மற்றும் அவரது சக நடிகர் ஜோடே டர்னர்-ஸ்மித் ஆகியோர் படத்தின் செயற்கை தொழில்நுட்ப நெறிமுறைகள் பற்றிய ஆய்வு சரியான நேரத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டனர். மேலும் ஜோடே கூறுகையில், “நாங்கள் இதை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு படமாக்கினோம். இதனை அவர்கள் மிகவும் தீர்க்கதரிசனமாக உருவாக்கியுள்ளனர்” என்றார்.
மேலும், “படம் உருவானபோது செயற்கை தொழில்நுட்பம் குறித்த உரையாடல் பெரிதாக இல்லை. ஆனால் தற்போது படம் வெளியாவதற்கான பொருத்தமான சூழல் உருவாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. செயற்கை தொழில்நுட்பம் குறித்தான பல கேள்விகளுக்கு எங்களிடம் எந்த பதில்களும் இல்லை. ஆனால், செயற்கை தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் குறித்தும், ஏஐ மனிதனை மையமாகக் கொண்டிருப்பது குறித்தும் எங்களுடன் இணைந்து கேள்வி கேட்குமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மனிதர்கள் ஏஐ உலகத்தை சிறப்பாக மாற்ற பயன்படுத்தினால் அது நல்லதுதான்” என்றார்.
“இவான் பீட்டர்ஸ் நடித்த ஜூலியன் டிலிங்கர் போல, செயற்கை தொழில்நுட்பம் எந்த நெறிமுறைகளும் இல்லாத ஒருவரின் கைகளில் இருந்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. சரியான, அனைவருக்கும் தேவைப்படும் சமயத்தில் படம் வெளியாகிறது”
ஜாரெட் லெட்டோ, ஜோடே டர்னர்-ஸ்மித், கிரேட்டா லீ, இவான் பீட்டர்ஸ், ஹசன் மின்ஹாஜ் மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் ஆகியோர் நடித்துள்ள ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் அக்டோபர் 10, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.