சமூகத்திற்கு தேவையான படம்! – பத்திரிகையாளர்கள் பாராட்டிய ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’

சமூகத்திற்கு தேவையான படம்! – பத்திரிகையாளர்கள் பாராட்டிய ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’. வித்தியாசமான தலைப்போடு, சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சிறப்பு காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய காலகட்டத்தில் சமுதாயத்திற்கு தேவையான கருத்தை சொல்லியிருப்பதோடு, அதை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கமர்ஷியலாக கையாண்ட விதம் படத்தை ரசிக்க வைப்பதாக, தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் பாராட்டை தொடர்ந்து உற்சாகமடைந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் கதையின் நாயகனான பால்ராஜ் படம் குறித்து கூறுகையில், “சினிமா மீது எனக்கு ஆர்வம் உண்டு. அதற்காக நான் திரைப்பட பயிற்சி வகுப்பில் இணைந்து நடிப்பு, இயக்கம் போன்றவற்றை கற்று தேர்ந்தேன். சில குறும்படங்களை இயக்கி தயாரித்திருக்கிறேன். தற்போது என் முதல் திரைப்படத்தை இயக்கி நடித்திருப்பதோடு, நானே சொந்தமாக தயாரிக்கவும் செய்திருக்கிறேன்.

‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ தலைப்பு நீளமாக இருந்தாலும், ரசிகர்களை கவரும் விதத்தில் இருப்பதால் தான் இந்த தலைப்பு வைத்தேன். தற்போது தலைப்பு மக்களிடம் பிரபலமாகியிருப்பதோடு, படத்தை பார்த்து பத்திரிகையாளர்கள் பாராட்டியதும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த படத்தின் கதை தற்போதைய காலக்கட்டத்தில் பல இல்லங்களில் நடக்கிறது. எனவே, இது சமூகத்திற்கும், மக்களுக்கும் தேவையான ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக மதுவுக்கு அடிமையாகும் ஆண்களினால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை இந்த படத்தில் சொல்லியிருப்பதோடு, அதன் மூலம் பல குடும்பங்களில் எத்தகைய குழப்பங்கள் ஏற்படுகிறது, என்பதையும் சொல்லியிருக்கிறோம். அதேபோல், கணவனின் விருப்பதிற்கு மாறாக நடக்கும் பெண்களினாலும் குடும்பம் எப்படி சிதைந்து போகிறது, என்பதையும் சொல்லியிருக்கிறோம்.

அழகான ஒரு குடும்பம் அமைதியின்றி போக, அந்த குடும்பத்தினரே எப்படி காரணமாகிறார்கள், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, முழுக்க முழுக்க கமர்ஷியல் பாணியில் சொல்லியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் மக்களை யோசிக்க வைக்கும், என்பதில் சந்தேகம் இல்லை.” என்று தெரிவித்தார்.

பால்ராஜ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் காயத்ரி ரேமா, சுவேதா ஸ்ரீ கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரவி மரியா, அம்பானி சங்கர், பசங்க சிவக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

உதயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்திருக்கிறார். கே.சங்கர் படத்தொகுப்பு செய்ய, சந்ரு நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஜாக்கி ஜான்சன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

காதல், காமெடி மற்றும் காமம் உள்ளிட்ட அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களோடு, மக்களுக்கு நல்ல விசயத்தை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *