
இளையராஜா, வைரமுத்து பிரிவிற்கு இது தான் காரணம்!
முதல் முறையாக இந்த மேடையில் தான் சொல்கிறேன்…
–கங்கை அமரன்!
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிப்பில், வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”. படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு சிறப்பாக நடைபெற்றது. இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இயக்குனர் அரவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த படத்தில் நடித்திருந்த பப்லு பிரித்திவிராஜ், புதுப்பட்டு சக்திவேல், வாழை ஜானகி, கதாநாயகி ஏஞ்சல், ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
கங்கை அமரன் பேசுகையில் கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம், ஆனால் அவர் இப்போது எம்பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் என்றார்.
ஊமை விழிகள் படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார் என்று விழா மேடையிலேயே அரவிந்தராஜிடம் கூறினார்.
ஹேராம் படத்தில் புதுவிதமான பாட்டு உருவாகுவதற்கு நான் தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமலஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் என்று சொன்னார்.
இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது. நான் இசையமைக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா. அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி வளர்ந்தார். அந்த காலகட்டத்தில் கல்லூரி விழாக்களில் பேசும்போதெல்லாம் பல இடங்களில் இளையராஜா வளர்ந்து வருவதற்கு நானே காரணம், என் பாடலே காரணம் என்று வைரமுத்து கூறி வந்தார். இதைக் கேள்விப்பட்டு நான் அண்ணன் இளையராஜாவிடம் சொன்ன போதும், அவர் நம்பவில்லை. ஆதாரப்பூர்வமாக அதை அறிந்து கொண்ட பின்பு இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் விரிசல் ஏற்பட்டது. இளையராஜாவுக்கும் வைரமுத்திற்கும் விரிசல் ஏற்பட காரணமே, ‘இளையராஜா என்னால் தான் வளர்கிறார் என்று வைரமுத்து வெளி மேடைகளில் பேசியது தான்’ என்றார் கங்கை அமரன்.
கமாண்டோவின் லவ் ஸ்டோரி படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ், சண்டை பயிற்சியாளர் கோல்டன் கோபால், இணை இயக்குனர் ஜெயக்குமார், எடிட்டர் புவனேஷ், டான்ஸ் மாஸ்டர் டயானா, யிஆர்ஓ கோவிந்தராஜ், மற்றும் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் கங்கை அமரன் பொன்னாடை போர்த்தி, மரியாதை செய்தார்.
கார்த்திக் ராஜா இசை அமைந்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் வீர அன்பரசு!