அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்துள்ளார்!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்துள்ளார்!

சிறந்த திரைப்படங்கள் அனைத்தும் துணிச்சலான முடிவில் இருந்துதான் தொடங்குகிறது. உலகம் அங்கீகரிப்பதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளர் புதிய திறமையாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் காதல், சுப்ரமணியபுரம் மற்றும் பீட்சா முதல் மாபெரும் சாதனை படைத்த பாகுபலி: தி பிகினிங், கே.ஜி.எஃப்: சாப்டர் 1 மற்றும் காந்தாரா வரை பல மறக்க முடியாத திரைப்படங்கள் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவிலும் ராக்கி, தி பிளேர் விட்ச் புராஜெக்ட் மற்றும் கெட் அவுட் போன்ற திரைப்படங்கள் புதிய திறமையாளர்கள் மீதான நம்பிக்கை சினிமா வரலாற்றை உருவாக்கும் என்பதை நிரூபித்தன.

அந்த வரிசையில், சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ், வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து புதிய சுவாரஸ்யமான கதைக்களங்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்று இந்திய சினிமாவில் தனியிடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் புதுமையான கதைக்களங்களை தொடர்ந்து ஆதரிப்பதோடு புதிய திறமையாளர்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றன. தற்போது, பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தங்களின் அடுத்த திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்திற்கு ‘லவ்வர் பாய்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் அட்லியின் முன்னாள் உதவி இயக்குநரான அசோக், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சென்னையில் நடைபெற்ற சிறப்புப் பூஜையுடன் ’லவ்வர் பாய்’ திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களான ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், ஹெச். வினோத், ’வித் லவ்’ புகழ் மதன் உள்ளிட்ட இயக்குநர்களும், தயாரிப்பாளர்கள் லலித் குமார், 5 ஸ்டார் செந்தில், ஜீ ஸ்டுடியோஸின் அக்‌ஷய், விநியோகஸ்தர்கள் அழகர் மற்றும் சீனு, திங்க் மியூசிக் சந்தோஷ், ஹாட்ஸ்டாரின் பிரசன்னா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழாவின் சிறப்பம்சமாக இயக்குநர்- நடிகர் அபிஷன் ஜீவிந்த், பாரத், பிக் பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன், தேவ், ‘5 ஸ்டார்’ செந்திலின் மகன் அஜய் கார்த்தி மற்றும் நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அர்ஜித்துடன் நெருங்கிய நட்பு கொண்ட ஜேசன் சஞ்சய், தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு இடையிலும் நேரில் வந்து படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தத் திரைப்படம் மற்றும் வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்தது குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “பேஷன் ஸ்டுடியோஸில் வளர்ந்து வரும் திறமையாளர்களையும் புதிய தரமான கதைகளையும் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். ‘லவ்வர் பாய்’ படத்தின் கதையை முதன்முறையாக கேட்டபோதே இயக்குநராக அசோக் மீது நம்பிக்கை வந்த்விட்டது. அவரது நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் தெளிவு ஆகியவை இந்தத் படத்தின் மீதான எங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது. பார்வையாளர்களுக்கும் இந்தக் கதை நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும். அசோக் கதை சொல்லும்போது, கேவிஎன் புரொடக்ஷன்ஸின் வெங்கட் கே நாராயணா அங்கு எதேச்சையாக வந்தார். படத்தின் மையக் கருவும் கதை சொல்லும் விதமும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. அதனால் இந்தத் திரைப்படத்தில் இணைய அவர் முடிவெடுத்தார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைவது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்க நாங்கள் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளோம். அர்ஜித் மிகுந்த அர்ப்பணிப்புள்ள வளர்ந்து வரும் நடிகர் மட்டுமல்ல, அவருக்குத் திரையுலகம் குறித்த ஆழமான அறிவும் உள்ளது. பல படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கிருத்தி ஷெட்டி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ’லவ்வர் பாய்’ படத்தில் திறமையான இளம் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படம் ஏற்கனவே சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படமும் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *