என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!

“என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!

இந்திய திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருபவர் நிமிஷா சஜயன். வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். வழக்கமான கதாபாத்திரங்களுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகளில் நடித்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிகையாக தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.

அந்த வரிசையில், சஜீவ் பழூரின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் நிமிஷா சஜயன் வழக்கறிஞராக நடித்துள்ளார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளிலும், வசன உச்சரிப்பிலும் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளது. சமீபத்தில் படத்தைப் பற்றிப் பேசிய நிமிஷா சஜயன், இந்தக் கதாபாத்திரத்திற்காக தயாரான விதம், உண்மையான நீதிமன்ற விசாரணைகளை நேரில் பார்த்த அனுபவம் வழக்கறிஞர் கதாபாத்திரத்தைப் பற்றிய தனது பார்வையை முழுமையாக மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

படத்தில் நடித்துள்ள அனுபவம் பற்றி நடிகை நிமிஷா சஜயன் பகிர்ந்து கொண்டதாவது, “இதற்கு முன்பும் ஒரு திரைப்படத்தில் நான் வழக்கறிஞராக நடித்திருக்கிறேன். ஆனால், ’என்ன விலை’ திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. நீதிமன்றத்திற்குச் சென்று அங்குள்ள வழக்கு விசாரணைகளை இயக்குநர் சஜீவ் பழூர் நேரில் கவனிக்கச் சொன்னார். அதற்கு முன்பு, வழக்கறிஞர்கள் வாதிடும் விதம் குறித்து எனக்குள் ஒரு கற்பனை இருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் நேரில் பார்த்தபோது அவர்கள் பேசும் விதம், வாதிடும் முறை, அங்குள்ள சூழல் அனைத்தும் நான் நினைத்ததைவிட மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருந்தது. அந்த அனுபவமே, நீதிமன்றக் காட்சிகளில் நான் வசனங்களைப் பேசும் விதத்தை மாற்றியது” என்றார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிமிஷா சஜயனும் சஜீவ் பழூரும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். நிமிஷா சஜயன் கதாநாயகியாக அறிமுகமான, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்’ திரைப்படத்திற்கு சஜீவ் பழூர் கதையாசிரியராக இருந்தார். தற்போது ‘என்ன விலை’ படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இது குறித்து நிமிஷா சஜயன் பகிர்ந்து கொண்டதாவது, ”நான் கதாநாயகியாக அறிமுகமான ’தொண்டிமுதலும் திருஷ்சாட்சியும்’ படத்தின் கதையாசிரியர் சஜீவ் பழூர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதி இயக்கிய ’என்ன விலை’ படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவருடைய எழுத்து மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. ஆனால், இந்தப் படத்தின் மூலம் ஒரு இயக்குநராக அவருடைய பார்வையையும் திறமையையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது இந்த முக்கியமான பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்” என்றார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது ‘என்ன விலை’ திரைப்படம். ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் பலர் கடலில் நாணயங்களை வீசும் பழக்கம் கொண்டவர்கள். கடலுக்குள் கிடக்கும் அந்த நாணயங்களை எடுக்க முயற்சிக்கும் ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களே கதையின் மையமாகும். தன்மானம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தக் கதை, பின்னர் ஒரு முக்கியமான சட்டப் போராட்டமாக மாறி, நாடு முழுவதும் கவனம் ஈர்க்கக்கூடிய நீதிமன்றத் தீர்ப்பை நோக்கிச் செல்கிறது.

நடிகர்கள்: இந்தப் படத்தில் நிமிஷா சஜயனுடன் கருணாஸ், விஜயலட்சுமி அகத்தியன், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீனா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘என்ன விலை’ திரைப்படத்தை சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ளார். கலாமயா ஃபிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

சமூக அக்கறை கொண்ட கதைக்களம், வலுவான கதாபாத்திரங்கள், மனித கண்ணியமும் நீதியும் பேசும் யதார்த்தமான திரைக்கதை ‘என்ன விலை’ திரைப்படம். நிமிஷா சஜயனுக்கு இந்தப் படத்தில் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் மற்றுமொரு முக்கியத்துவதும் வாய்ந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *