அமரன்
இயக்கம் – ராஜ்குமார் பெரியசாமி
நடிகர்கள் – சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா
இசை – ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – ராஜ் கமல் ஃபிலிம்ஸ் – கமலஹாசன்.
முகுந்த் வரதராஜன் தனது சிறு வயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார். கல்லூரியில் இந்து ரெபேக்கா வர்கீஸை சந்திக்கும் முகுந்த் காதலில் விழுகிறார். காதல் ஒரு பக்கம் இருந்தாலும் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போடு இராணுவ பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். அவர்களுடைய காதலிக்கு முகுந்த் வீட்டில் கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது. முகுந்த் ராணுவ வீரன் என்பதால் இந்துவின் தந்தை அவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எப்படியோ பல போராட்டங்களுக்கு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் முகுந்த் – இந்துவின் திருமணம் நடைபெறுகிறது.
ராணுவத்தில் முதலில் லெப்டினன்ட் இணையும் முகுந்த், பின் கேப்டனாக பதவி ஏற்க, அதனை தொடர்ந்து 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பொறுப்பேற்கிறார். காஷ்மீர் எல்லைப் பகுதியில் அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை என்கவுண்டர் செய்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். இந்த சம்பவத்திற்கு பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை ராணுவ படமாக மட்டுமே காட்டாமல், முகுந்த் – இந்து இருவருக்கும் இடையே இருக்கும் காதலை வைத்து திரைக்கதையை அழகாக வடிவமைத்துள்ளார்.
போர்க்களத்தில் முகுந்த் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், வீட்டில் இந்துவின் தவிப்பை காட்டிய விதம் மிகவும் எமோஷனலாக இருந்தது. கல்லூரியில் தொடங்கி முகுந்தின் மரணம் வரை இருவருக்கும் இடையே இருந்த காதல், முகுந்தின் மறைவு பின்பும் அவரை எந்த அளவிற்கு இந்து காதலித்து கொண்டு இருக்கிறார்கள் என்று காட்டிய விதமும் அருமையாக இருந்தது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் கமர்ஷியலுக்காக எதுவும் செய்யாமல், எதார்த்தமாக இப்படத்தை எடுத்ததற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டு.
இடைவேளை காட்சி எந்த அளவுக்கு மாஸாக இருந்ததோ, கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் நெகிழ வைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தான் இறந்து பிறகு, தன் மனைவி யார் முன்பும் கண்ணீர் விடக்கூடாது என முகுந்த் சொன்ன வார்த்தையை மனதில் வைத்து இந்து நடந்துகொண்ட விதம் மிகவும் எமோஷனலாக இருந்தது.
தந்தையின் மறைவு அறியாத குழந்தை ‘அப்பாவுக்கு அடுத்த விடுமுறை எப்போது’ என்று தாயிடம் கேட்கும் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது. தனது குடும்பத்தை பிரிந்து ராணுவத்திற்கு எப்போது சென்றாலும், கண் கலங்காத முகுந்த், இறுதியாக தனது மனைவி, குழந்தை, தாய், தந்தையை விமான நிலையத்தில் சந்தித்துவிட்டு செல்லும் போது கண்கலங்கிய காட்சிகளை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அழகாக எடுத்திருந்தார்.
முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவரையும் சிலிர்க்க வைத்துவிட்டார் கதாநாயகன் சிவகார்த்திகேயன். ஒரு பக்கம் சிவாவின் நடிப்பு பட்டையை கிளப்பி கொண்டு இருந்தாலும், மற்றொரு புறம் அவரை மிஞ்சும் அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார் இந்து கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி. இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பாராட்டுக்கள்.
அதே போல் முகுந்த் வரதராஜனுக்கு எப்போது பக்கபலமாக துணை நின்று விக்ரம் சிங் கதாபாத்திரமும் சிறப்பாக இருந்து. அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த பூவன் அரோராவுக்கு தனி பாராட்டு.
கண்டிப்பாக அமரன் படம் முகுந்த் வரதராஜனுக்கு சிறந்த சமர்ப்பணமாக அமையும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்திய ராணுவத்திற்காக உயிர்நீத்த முகுந்த் வரதராஜன் போல் இன்னும் ஏராளமானோர் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களுடைய கதையும் மக்களுக்கு படங்கள் மூலம் தெரிய வந்தால், அது அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.
மொத்தத்தில் இந்த ” அமரன் ” இந்திய ராணுவத்தின் ஒரு முகம் .